கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தென்காசியை அடுத்த காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கந்துவட்டி சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். அதை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த கார்ட்டூன் ஆத்திரத்தின் உச்சத்தில் தான் வரைந்தேன் என்ற கருத்தினையும் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பலரும் அந்த கார்ட்டூனை ஷேர் செய்திருந்திருந்தனர்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக கார்ட்டூன் வரைந்த பாலாவை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். கந்துவட்டி கொடுமையால் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூன் வரைந்த புகாரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை ஆட்சியர் புகாரில் பாலா மீது இரண்டு பிரிவுகளின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட பாலாவை நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீசார் அவரை அழைத்து செல்கின்றனர்.