கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அரசு சார்பில் வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும், இன்னும் சிறப்பாக செயல்பட அரசு தவறிவிட்டது என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துவந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 36 வது ஷார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
கரூரில் பேசிய தம்பிதுரை, மழை பாதிப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளை குறைகூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதான் மக்களின் மீதான ஸ்டாலினின் அக்கறை என விமர்சித்தார். மேலும் பருவமழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.