புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து முட்டல் மோதல் நீடித்தே வருகிறது. இதில் முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக தலைமைச் செயலர் மனோஜ் பரிதா செயல்படுவதாக கிரண்பேடி புகார் கூறிவந்தார்.
மேலும் 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் இணைச் செயலராக மனோஜ் பரிதாவுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஆனாலும் புதுவையை விட்டு அவர் செல்லவில்லை.
இதனிடையே கிரண்பேடி ஆதரவாளரான புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரை சபாநாயகரின் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைத்து தலைமைச் செயலர் மனோஜ் பரிதா உத்தரவிட்டார். இதில் ஆளுநர் கிரண்பேடி கடும் அதிருப்தி அடைந்தார்.
அத்துடன் மனோஜ் பரிதாவை இடம் மாற்றம் செய்யவும் உள்துறை அமைச்சகத்திடம் கிரண்பேடி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் மனோஜ் பரிதா அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அஸ்வினி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தலைமை செயலாளராக பணியாற்றியவர் அஸ்வினிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.