பந்தாவுக்காகவும், விளம்பரத்திற்காகவும் காவலர்களை சுரண்டும் முதலமைச்சர்; அன்புமணி ராமதாஸ் காட்டம்!

anbumani
அரசியல் சார்ந்த தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக காவல்துறையை அனைத்து வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளும் தமிழக அரசு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற மறுக்கிறது. காவல்துறையினரின் உரிமைகளை மறுத்து அமைதிப்படையாக செயல்பட வேண்டிய காவல்துறையை அடிமைப்படையாக நடத்த ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், மற்ற அரசுத் துறைகளில் பணியாற்றும் பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பயன்கள், வரையறுக்கப்பட்ட பணி நேரம், வார விடுப்பு, கூடுதல் பணிக்கு இரட்டிப்பு ஊதியம், பதவி உயர்வு, படிகள் உயர்வு, மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்தல், உயரதிகாரிகளின் வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் ஆர்டர்லி முறையை ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையிலும் ஒழித்தல், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக வழங்குதல், காவலர்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவற்றை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்பாக ஜூலை 4-ஆம் தேதி காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். அதில் இடம் பெற்றிருந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமடுக்கவில்லை. புதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒருபுறமிருக்க, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கூட இன்னும் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, காவலர்களுக்கான உணவுப்படி சென்னைக் காவல்துறையினருக்கு ரூ.200 ஆகவும், மற்ற இடங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.150 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை மாநகரக் காவலர்களுக்கு உணவுப்படியாக மாதம் ரூ.5200 வழங்கப்படும் நிலையில், மற்ற மாவட்டங்களில் ரூ.800 மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம் என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்களில் சபிக்கப்பட்டவர்கள் என்றால் காவலர்கள் தான். நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் எதுவுமின்றி அழைக்கப்படும் போதெல்லாம் ஓடி வந்து பணி செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆட்சியாளர்களின் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டால் பல நேரங்களில்  இரு நாட்களுக்கு, இயற்கை அழைப்புகளுக்குக் கூட இடம் கொடுக்காமல் சாலையோரங்களில் விழிப்புடன் காவல் காக்க வேண்டும். குடும்பத்தினரை பல நேரங்களில் பார்க்க முடியாமல், குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பணிக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் சோகமும், துரோகமும் ஆகும்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு காவல்துறையினரின் பணிச்சுமை  பல மடங்கு அதிகரித்து விட்டது. எடப்பாடி  சென்னையிலிருந்து வேலூர் சென்றால் வழி நெடுகிலும் காவலர்கள் நிறுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளியூர் விழாக்களில் கலந்து கொண்டு  நள்ளிரவில் அவர் சென்னை திரும்பினால் கூட மாநகரம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்படுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றாலும் கூட, வேண்டுமென்றே காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்தி பந்தா காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். முதலமைச்சரின் பாதுகாப்பு என்ற பெயரில் தாங்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறோம் என்பது குறித்து நூற்றூக்கணக்கான காவலர்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். குறிப்பாக பெண் காவலர்கள் படும் அவதி கொடுமையானது.

தமது பந்தாவுக்காகவும், விளம்பரத்திற்காகவும் இப்படியெல்லாம் காவலர்களை சுரண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கோரிக்கைகளை யோசிக்காமல் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாததால் காவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அது எந்த நேரமும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாக வெடிக்கும் ஆபத்துள்ளது. இதை உணர்ந்து காவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

Leave a Response