மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான, யு.பி.எஸ்.சி., இந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில், 985 காலியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி , பிரிலிமினரி தேர்வை நடத்தியது.
இதில், 13 ஆயிரத்து, 350 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கான மெயின் தேர்வு, அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
கடந்த 28 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஷபீர் கரிம், தேர்வு எழுதினார்.
பொறியியல் பட்டதாரியான இவர், 2014ல், யு.பி.எஸ்.சி., தேர்வில், 112வது இடத்தில்தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றார். அதே நேரத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக விருப்பம் தெரிவித்து, பயிற்சிக்கு பின், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் – டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக
பயிற்சி பெற்று வந்தார்.
கேரளாவில், மனைவியுடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்களையும் நடத்தி வரும் ஷபீர் கரிம் மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயற்சித்துள்ளார்.
அதற்காக, விடுமுறை எடுத்து படித்து வந்த, ஷபீர் கரிம், தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் கண்ணில் மண்ணை துாவி, அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, மொபைல் போன் மற்றும் சிறிய வகை,’புளூடூத்’ கருவியை எடுத்து சென்று உள்ளார்.
அதன் மூலம் ஐதராபாதில் இருந்த, மனைவிக்கு கேள்விதாளை அனுப்பி, புளூடூத் கருவி வழியாக பதிலை பெற்று, தேர்வு எழுதி உள்ளார்.
ஷபீர் கரிம் ஹைடெக்காக காப்பியடித்ததை கண்டுபிடித்த, தேர்வு மைய கண்காணிப்பாளர், ஷபீர் கரிமை, எழும்பூர் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து
ஷபீர் கரிமிடம் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், சாரங்கன், இணை கமிஷனர், மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
மேலும் ஷபீர் கரிம் காப்பியடிப்பதற்கு உடந்தையாக இருந்த, அவரது மனைவி ஜாய்சி ஜியாவும் கைது ஹைதிராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.