அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஓபிஎஸ் அணியினர் போலி பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதாகவும் தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது.
அதே நேரத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்போ, அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர் தினகரன்;
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். அவரால் அதிமுகவுக்கோ, அதிமுகவின் சின்னத்துக்கோ உரிமை கோர முடியாது என வாதிடப்பட்டது.
ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகினர்.
தினகரன் சார்பில் மாஜி அமைச்சர் அஸ்வினினிகுமார் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 23-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதனிடையே நாளை விசாரணையின் போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் அஸ்வினிகுமார் சற்று தாமதமாக ஆஜராக அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இதை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.