மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து ,அதில் ஆட்சேபத்திற்குரிய பகுதிகளை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எழுத்தாளர் செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டியர் வரலாறு, வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? ஆகிய புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரு புத்தகங்களும் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்திற்கு 2013ம் ஆண்டும், வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? என்ற புத்தகத்துக்கு 2015ம் ஆண்டும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை எதிர்த்து நூல்களின் ஆசிரியரான செந்தில்மள்ளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் அடங்கிய முழு அமர்வு, புத்தகங்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
“புத்தகத்தில் பிற சாதியினருக்கு எதிராகவும், வெறுப்புணர்வு பரப்பும் வகையிலும், மாநிலத்தின் பொது அமைத்திக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் உள்ளன.
வரலாற்று உண்மைகள் மட்டுமே இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால், அதன்மூலம் பிற சாதியினரை மற்றும் பெண்களை இழிவுபடுத்துவதற்கு அவருக்கு உரிமையில்லை. மனுதாரர் புத்தகத்தில் கட்டுப்பாட்டுடன் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால், புத்தகத்திற்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. புத்தகத்தில் உள்ள சர்ச்சைகுரிய பகுதிகளை மாற்றியமைப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் பெரும் பகுதியை மாற்றுவதாக கூறிய பின்னரும் தடையை நீடிப்பதில் நியாயமில்லை.
அதேபோல, மனுதாரர் தரப்பிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் அரசு தடை விதித்துள்ளது. தனி நாடு கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது, பிற மொழி மக்களுக்கு எதிரான கருத்துகள் போன்றவற்றை புத்தகத்திலிருந்து நீக்கி திருத்தப்பட்ட புத்தகத்தை நகலுடன் அரசுக்கு வழங்க வேண்டும். அதை இரண்டு வாரத்திற்குள் பரிசீலித்து புத்தகத்தின் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்”. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.