ஆருஷி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட அவரது பெற்றோரான தல்வார் தம்பதி, நேற்று மாலை சிறையிலிருந்து மாலை 5 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
நொய்டாவை சேர்ந்தவர்கள் பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார். இந்த தம்பதிக்கு 14 வயதில் ஆரூஷி என்ற மகள் இருந்தாள். கடந்த 2008ம் ஆண்டு, மே 16ம் தேதி வீட்டில் படுக்கை அறையில் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது வீட்டு பணியாளர் ஹேம்ராஜ் என்பவரும் அவர் தங்கியிருந்த மாடி அறையில் இறந்து கிடந்தார். இந்த கொலையில் ஆருஷியின் பெற்றோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிபிஐ நீதிமன்றத்தால் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதேசமயத்தில் சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தண்டனையை எதிர்த்து தல்வார் தம்பதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் கடந்த அக்.12ம் தேதி அவ்வழக்கின் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், கொலை செய்ததற்கான போதிய ஆதாரங்களை அரசு தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என கூறி பெற்றோரை விடுவித்து உத்தரவிட்டது. இதையடுத்து சிறையிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியது. ஆனாலும், நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைப்பதில் தாமதம் ஆனது. இந்நிலையில், இருவம் நேற்று மாலை சுமார் 5-மணிக்கு தாஸ்னா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த தல்வார் தம்பதி நேற்று சுமார் 5 மணியளவில் சிறையை விட்டு வெளியேறி நொய்டாவில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அவர்களை சந்தித்து பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் சிறை வளாகத்தில் குவிந்து இருந்தனர்.
தல்வார் தம்பதியின் வக்கீல் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அரசு தரப்பில் தவறான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கினார். இருப்பினும் நீதிமன்றம் தல்வார் தம்பதியை விடுவித்து உத்தரவிட்டது அவர்களை அமைதியாக வாழ பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
மருத்துவ சேவைக்கான ஊதியத்தை வாங்க மறுப்பு!
முன்னதாக, தல்வார் தம்பதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்குள்ள சக கைதிகளுக்கு தல்வார் தம்பதி பல்மருத்துவம் பார்த்தனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்டபோது அவர்கள் சிறையில் ஆற்றிய மருத்துவ சேவைக்காக சிறை துறை ஊதியமாக ₹49,500 பணத்தை வழங்கினர். ஆனால், அதனை வாங்க தல்வார் தம்பதி மறுத்துவிட்டதாக சிறை சூப்பர் இன்டன்டன்ட் தாத்ரம் மவுரியா தெரிவித்தார். மேலும் சிறை கைதிகளுக்கு சேவையாற்றும் வகையில், 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு வந்து செல்வதாக தல்வார் தம்பதி உறுதியளித்துள்ளதாக சிறை மருத்துவர் சுனில் தியாகி கூறினார்.