பலவித சர்ச்சைகளுக்குப்பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று முதலில் அமைச்சர்கள் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது பின்னர் அவரது மகனும் நடிகருமான பிரபு மற்றும் திரையுலகினர் பலரும் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து மணிமண்டபத்தை முதல்வர் திறந்துவைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.அதன்படி அரசு தரப்பில் (அக்டோபர்) 1-ந்தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். அதன்பின்னர், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுமம் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டே இந்த விழாவை புறக்கணித்திருப்பதாக சிவாஜி ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளர்.முதல்வர் திறந்துவைக்கவேண்டுமென கோரிக்கை வைத்தபின்னர் துணைமுதல்வர் திறந்துவைப்பாரென அறிவிக்கப்பட்டதை நடிகர் பிரபு மற்றும் திரையுலகினர் ஏற்றுக்கொண்டாலும் அவரது ரசிகர்கள் இரண்டு நாளைக்கு அரசு விழா எதுவும் இல்லாத போதும் முதல்வர் திட்டமிட்டே புறக்கணித்திருப்பதாக சிவாஜி ரசிகர்கள் தங்களது குமுறலை தெரிவித்துள்ளனர்.