காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? -மத்திய அரசு மீது பாய்ந்த உச்ச நீதிமன்றம்

sup co

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 26-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

வழக்கு விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், , ‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, வகுக்காதது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவது தவறான அணுகுமுறை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ‘காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்படும் போது, அது தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் நடுவர் மன்றத்தின் முடிவுகளை மாற்றியமைக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக காவிரி நதி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அதை அமைக்கும் போது நடுநிலைமையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அமல்படுத்துவதிலிருந்து மத்திய அரசு ஒதுங்கவில்லை. காவிரி பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘அப்படியென்றால், தற்போது நடைபெறும் வழக்கு தொடர்பாக தீர்ப்பு அளித்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படும்’ என்றனர்.
தவிர, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பான விசாரணை புதன்கிழமையும் (செப்டம்பர் 20) நடைபெறும்’ எனவும் தெரிவித்தனர்.

Leave a Response