என்னாது பிளாட்பாரம் டிக்கெட் 20 ரூபாவா ?

paltform_2359637f
ரயிலில் பயணம் செய்யும் கட்டணத்தை விட, பிளாட்பாரம் கட்டணம் இரு மடங்காக வசூலிப்பது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க, பயணியர் மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர்.

தஞ்சை ரயில்வே ஸ்டேஷன், மிகவும் பழமை வாய்ந்தது. தஞ்சை வழியாக, 18க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 20க்கும் மேற்பட்ட பயணியர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயிலில் செல்லும் உறவினர்களை வழிஅனுப்ப வருபவர்களும், ரயிலில் செல்லும் உறவினர்களை பார்க்க வருபவர்களும் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்கான கட்டணம், 10 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் பிளாட்பாரம் கட்டணத்தை, 20 ரூபாயாக ரயில்வே நிர்வாகம், செப்டம்பர், 15ம் தேதி வரை உயர்த்தி உள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில், அதிகமான கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. ரயிலில் பயணிக்கும் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ, உறவினர்கள் உடன் வருவர். அவர்கள், 20 ரூபாய்க்கு பிளாட்பாரம் டிக்கெட் வாங்க வேண்டி உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தஞ்சையில் இருந்து, திருச்சிக்கு செல்ல, 15 ரூபாய், கும்பகோணத்திற்கு, 10 ரூபாய் கட்டணம். ஆனால், ரயில்வே ஸ்டேஷனில், இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம், 20 ரூபாய். தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய, ஐந்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. ஆனால், யாரும் பிளாட்பாரம் டிக்கெட் எடுப்பதற்கு முன்வருவதில்லை. உறவினர்களை ரயிலில் ஏற்ற வருபவர்கள் கூட, கும்பகோணம் அல்லது தஞ்சையை அடுத்த ஆலக்குடிக்குரியவில், 10 ரூபாய் டிக்கெட் வாங்கி, உறவினர்களை ஏற்றிய பின், திரும்பி விடுகின்றனர். ‘இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்’ என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Response