உதகையில் நேற்று நடந்த மலர் கண்காட்சி விழாவில், முதல்வர் முன்னிலையில் அதிமுகவினரோடு காங்கிரஸ் எம்எல்ஏ சேர்ந்து நடனமாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவினருடன் பாராமுகமாகவே உள்ளனர். அதிமுக அரசின் விழாக்களிலும் காங்கிரஸார் பங்கேற்பதில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அரசியல் கட்சியினரிடையே இருந்த இறுக்கம் நீங்கி, இணக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு உதாரணமாக அமைந்தது உதகை மலர் கண்காட்சி.
முதல்வர் பழனிசாமியை மகிழ்விக்கும் வகையில் அதிமுக நிர்வாகிகள், படுகரின மக்களின் பாரம்பரிய நடனமாடினர். இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஆர்.கணேஷும் பங்கேற்றார்.
நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் படுகரினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உற்சாக மிகுதியில் முதல்வர் முன்னிலையில் நடனமாடினர். இதில், காங்கிரஸ் எம்எல்ஏவும் சேர்ந்து நடனமாடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.