போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜை பணியிட மாற்றம் கோரி திமுக கடிதம்!

D m k
சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜார்ஜை பணியிட மாற்றம் செய்யக் கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்கே நகர் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள ஆளும் கட்சியான அதிமுக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள பன்னீர்செல்வம் தரப்பிலும் ஆர்கே நகர் தொகுதியில் எவரேனும் நிறுத்தப்படுவர். அதேபோல், எம்ஜிஆர்-ஜெயலலிதா-தீபா பேரவை என தனி அமைப்பு தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபாவும், ஆர்கேநகரில் களமிறங்கவுள்ளார். இதனால், அதிமுக இரண்டு, மூன்றாக பிளவு கண்டுள்ளது.

இடைத்தேர்தல்களை பொறுத்தவரை பெரும்பாலும் ஆளும் கட்சிகளுக்கே அவை சாதகமாக அமைந்துள்ளன. ஆனால், ஆளும் அதிமுக தற்போது பிளவு கண்டுள்ளதாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள காரணத்தாலும், இந்த இடைத்தேர்தலானது திமுக-வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜார்ஜை பணியிட மாற்றம் செய்யக் கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், ஆர்கேநகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஜார்ஜ் செயல்படுவார் என முறையிடப்பட்டுள்ளது.

Leave a Response