தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, டெல்லியில் நேற்று மூன்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, மறுநாள் மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது 106 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, எம்.வெங்கைய நாயுடு, ரவிசந்தர் பிரசாத் ஆகியோரை சந்தித்தார்.
முதல்வர் முதலாவதாக கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து,”சென்னை மதுரவாயல் துறைமுக பறக்கும் சாலை திட்டம்”,”சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுப்புறச்சாலைகள் அமைத்து தரவேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாக அறிவித்துள்ளார்.
அடுத்தபடியாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவை பழனிசாமி சந்தித்தார்.”சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்படுவதையும், அம்ருத் திட்ட நகரங்கள் குறித்தும்,கேபிள் டிவியை டிஜிட்டல் தொழில் நுட்ப மயமாக்குவது குறித்தும்ஆலோசனை நடத்தியதாக கூறியுள்ளார்.
இறுதியாக மத்திய சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை பழனிசாமி சந்தித்து பேசினார். “நீட்”தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும், தமிழகத்தில் “பாரத்நெட்”திட்டத்தை தமிழக அரசு மூலம் செயல்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.