தன் பக்கமே ‘கத்தி’யை திருப்பிய விஜய்..!

“விளம்பரப்படுத்தும் பொருளின் உண்மைத்தன்மை பற்றி தெரியாமல், வெறுமனே காசை மட்டும் வாங்கிக்கொண்டு விளம்பரத்தில் நடித்து அதை மக்களிடம் தவறாக கொண்டு சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை”- அஜித் விளம்பரப்படங்களில் நடிக்காததற்கு சொல்லும் காரணம் இதுதான். அப்படி இருப்பதுதான் நேர்மையும் கூட..

ஆனால் விஜய் சில விளம்பரங்களில் நடிக்கிறார். இப்போது பிரச்சனை அதுவல்ல.. சில வருடங்களுக்கு முன்னர் இருந்து கொக்கோகோலா குளிர்பான நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் விஜய் நடித்து வருவது உங்களுக்கு தெரியும்..

ஆனால் தற்போது வெளியான ‘கத்தி’ படத்தில் தண்ணீர் பிரச்சனையை முன வைத்து க்ளைமாக்ஸில் விஜய் பேசும்போது கோலா நிறுவனம் ஒரு நாளைக்கு ஆறரை லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து அதன்மூலம் மக்களுக்கு தண்ணீர் பஞ்சத்தை உருவாக்குக்கிறது என கோப வசனம் பேசியுள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிக்கொடுத்த வசனத்தை தான் அவர் பேசியிருந்தாலும், தான் விளம்பரபடுத்திவரும் பொருளை தயாரித்துவரும் நிறுவனத்திற்கு எதிராகவே அவர் வசனம் பேசியிருப்பது தான் ஆச்சர்யம். அப்படியானால் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் ஏன் விஜய் நடித்தார்..? நடித்தபின் அந்த நிறுவனத்தின் தண்ணீர் கொள்ளை பற்றி அவருக்கு தெரிய வந்தாலும் கூட இதுவரை வாய் திறக்காதது ஏன் என பல சமூக ஆர்வலர்கள் கேள்விக்கணைகளை வீச ஆரம்பித்திருக்கிறார்கள்.. இதனால் தேவையில்லாமல் கத்தியை தன் பக்கமே திருப்பியிருக்கிறார் விஜய்..