வில்லனாக மாறினார் தேவதர்ஷினி….!

ஒரு படத்துக்கு இப்படி பேர் வைத்திருக்கிறார்கள்… ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்று.. அப்படி வைப்பதற்கும் ஏதாவது காரணம் இருக்குமே… இருக்கிறது.. “லட்டுன்றது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு. அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம்” என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ஜீன்ஸ்..

ஆனால் இனிதான் இருக்கிறது முக்கிய விஷயமே.. இந்த உலகில் ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவுதான் கதை! அந்த கனவு உலகத்துல ஆண்கள் எல்லோரும் பெண்களா இருக்காங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களா இருக்காங்க. அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க.

அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத் தனமா அடாவடியா இருப்பாங்க. இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும்ங்கிறதை யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லிருக்காராம் இயக்குனர் ஜீன்ஸ்..

இந்தப்படத்தில் கதாநாயகனாக கிரண் மை(பெண்) நடித்திருக்கிறார். கதாநாயகியாக இயக்குனர் ஜீன்ஸ் (ஆண்) நடித்திருக்கிறார். மற்றும் தலைவாசல் விஜய்,மகாநதி சங்கர், ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார்.

உண்மையிலேயே இது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான முயற்சி தான். பின்னே.. உலக சினிமா வரலாற்றிலேயே மொத்தம் இரண்டரை மணி நேர படமும் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடிச்சு இதுவரைக்கும் எந்த படமும் வந்ததில்லை.. இது தான் முதல் படம். தயாராக இருங்கள்.. ஒரு பெரிய காமெடி ட்ரீட் காத்திருக்கு..